எட்டயபுரம் அருகே, கண்மாயில் மூழ்கி சிறுமி பலி - அண்ணன் கண் முன்னே பரிதாபம்


எட்டயபுரம் அருகே, கண்மாயில் மூழ்கி சிறுமி பலி - அண்ணன் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 6:18 PM GMT)

எட்டயபுரம் அருகே அண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

எட்டயபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உருளைக்குடியைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு கவி பிரசாத் (9) என்ற மகனும், உதய கீதா (7) என்ற மகளும் இருந்தனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கவி பிரசாத் 4-ம் வகுப்பும், உதய கீதா 2-ம் வகுப்பும் படித்தனர்.

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, சமுத்திரபாண்டி தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன், பக்கத்து ஊரான திப்பனூத்தில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கவி பிரசாத், உதய கீதா மற்றும் உறவினரின் மகளான நர்மதா (6) ஆகிய 3 பேரும் திப்பனூத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றனர். அப்போது உதய கீதா எதிர்பாராதவிதமாக கண்மாயின் ஆழமான பகுதியில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவளுடைய அண்ணன் கவி பிரசாத், நர்மதா ஆகிய 2 பேரும் கூச்சலிட்டவாறு ஓடிச் சென்று, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று, கண்மாயில் இறங்கி உதய கீதாவை மீட்டனர். பின்னர் அவளை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே உதய கீதா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்றபோது, அண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story