ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்


ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்
x
தினத்தந்தி 18 Jan 2020 10:45 PM GMT (Updated: 18 Jan 2020 10:42 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் விளைவாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

வேலூர் மாவட்டம் கம்மவான் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 28). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் தங்கி தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதில் வெங்கடேசன் தான் சம்பாதித்த பணத்தை இழந்தார். கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் ஸ்ரீபெரும்புதூரில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். சூதாட்டத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த வெங்கடேசன் மனஉளைச்சலில் இருந்து வந்தார். நண்பர்களிடம் வாழ பிடிக்கவில்லை தற்கொலை செய்ய போவதாக கூறி வந்தார்.

இந்தநிலையில் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெங்கடேசன் வெளியே சென்றார். நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் வெங்கடேசனின் உடல் மிதந்தது. அவர்ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story