கோனூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்


கோனூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 8:36 PM GMT)

கோனூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெற்றது. அதன்படி காணை ஊராட்சி ஒன்றியம் கோனூர் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை புகட்டி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங்., எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, விக்கிரவாண்டி முத்தமிழ்செல்வன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன், மாவட்ட ஆவின் தலைவர் பேட்டை வி.முருகன், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் செந்தில்குமார், விழுப்புரம் தாசில்தார் கணேசன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1,437 மையங்கள்

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்கள் என்று மாவட்டத்தில் மொத்தம் 1,437 மையங்களில் இம்முகாம்கள் நடைபெற்றது. இதன் மூலம் மொத்தம் 1,54,539 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

இப்பணிகளில் பொது சுகாதாரத்துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 5,636 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதவிர பஸ் மற்றும் ரெயில் நிலையம், கோவில்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 2 நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிட்டு சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story