சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு


சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jan 2020 10:30 PM GMT (Updated: 24 Jan 2020 6:40 PM GMT)

சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டத்தில் 8 சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சிமெண்டு ஆலைகள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் போட்டி போட்டுக்கொண்டு விவசாய நிலங்களை உள்ளூர் தரகர் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது. அதன்படி ஆங்காங்கே சிமெண்டு நிறுவனங்களால் கையகப்படுத்திய நிலங்களில் சுரங்கம் தோண்டி சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்கப்பட்டு சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சிமெண்டு நிறுவனங்கள் கையகப்படுத்திய நிலங்களில் தன்னிச்சையாக சுரங்கம் அமைக்க முடியாது என்றும், பூமியில் 3 மீட்டருக்கு கீழே உள்ள கனிம வளங்கள் மத்திய அரசுக்கு சொந்தமானது என்றும் இதனை மத்திய அரசு தான் ஒப்பந்தம் வழங்கி சுரங்கங்கள் அமைக்க முடியும் என்று சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் சிமெண்டு ஆலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் மற்றும் தளவாய் கிராமங்களில் இயங்கி வரும் சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான ஆதனங்குறிச்சி மற்றும் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இடுவதற்காக மத்திய அரசின் கனிமவள ஆய்வு நிறுவனம் அதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இதை கண்ட அப்பகுதி கிராம மக்கள் இந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைத்து வருவதாக நினைத்து அச்சமடைந்துள்ளனர்.

மேலும் ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் வட மாநில தொழிலாளர்கள் என்ப தால் கிராம மக்களின் கேள்விகளுக்கு அவர்களால் எவ்வித பதிலும் கூற முடியவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடையே ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story