தனவேலு எம்.எல்.ஏ.வின் பொய்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி


தனவேலு எம்.எல்.ஏ.வின் பொய்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
x
தினத்தந்தி 24 Jan 2020 11:00 PM GMT (Updated: 24 Jan 2020 8:19 PM GMT)

தனவேலு எம்.எல்.ஏ.வின் பொய் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு மக்கள் மத்தியில் உண்மை எது? பொய் எது? என்பதை அம்பலப்படுத்துவோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு புதுச்சேரியில் காங்கிரஸ் பேரியக்கம் 2 பிரிவாக செயல்படுகிறது என்று அவதூறான செய்திகளை தொடர்ந்து கூறி வருகிறார். இது ஒரு தவறான செயலாகும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் பேரியக்கத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வழிகாட்டுதலோடு ஒற்றுமையாக செயல்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறோம். முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு செவ்வனே செயல்பட்டு வருகிறது.

ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று சிறப்பாக பணியாற்றி நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. இத்தருணத்தில் மக்களை திசைதிருப்ப உண்மைக்கு புறம்பான கருத்துகளை தனவேலு எம்.எல்.ஏ. தொடர்ந்து கூறிவருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கு இடம் இல்லை என்பதை இத்தருணத்தில் தெள்ளத்தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். தனவேலு கூறுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை துணிவுடன் எதிர்கொண்டு எது உண்மை? எது பொய் என்பதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.


Next Story