புதுவை மாநில வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கிறோம் நாராயணசாமி பெருமிதம்


புதுவை மாநில வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கிறோம் நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:37 PM GMT (Updated: 25 Jan 2020 11:37 PM GMT)

புதுவை மாநில வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கிறோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.

புதுச்சேரி,

நேரு யுவகேந்திரா சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதற்காக சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து நச்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் புதுச்சேரி வந்தனர்.

புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். இந்த கலாசார பரிமாற்ற நிறைவு விழா அதிதி ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திராவின் தமிழக-புதுச்சேரி இயக்குனர் நடராஜ் வரவேற்று பேசினார்.

விழாவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கினார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

இளைஞர்களுக்காக தனியாக ஒரு அமைப்பினை ஏற்படுத்தியவர் ராஜீவ்காந்தி. அவர்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரு யுவகேந்திராவை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் இப்போது இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம் போன்றவற்றை பிற மாநிலத்தவரும் தெரிந்துகொள்ளவும், பிற மாநில கலாசாரங்களை நாம் அறிந்துகொள்ளவும் இது உதவிடும். அதன் மூலம் பிற மாநில மக்களுக்கு இடையேயும் நட்பு ஏற்படும்.

ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும்போது அவருடன் நானும் சென்றுள்ளேன். அப்போது பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளின் கலை திறனை எங்களால் பார்க்க முடிந்தது. அவர்களது கலாசாரம் நம்பிக்கை நிறைந்தது.

அங்கு தீவிரவாதம் இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர். இப்போது உங்களுக்கு புதுச்சேரி வரும் வாய்ப்பினை சத்தீஷ்கர் மாநில முதல்-அமைச்சர் உருவாக்கி தந்துள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் நீங்கள் பார்த்தது, ரசித்ததை உங்கள் மாநில மக்களிடம் சொல்லுங்கள். புதுவை மாநிலம் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என பல்வேறு துறைகளிலும் சிறந்த மாநிலம். இதற்காக நாங்கள் மத்திய அரசிடமிருந்து 4 விருதுகளை பெற்றுள்ளோம்.

அகில இந்திய அளவில் வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கிறது. இதற்காக நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக உழைக்கிறோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. பேசும்போது, நம்மிடையே பல்வேறு சாதி, மத, இனங்கள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் ஒரே குடையின்கீழ் வாழ்ந்து வருகிறோம். நாடு சுதந்திரம் அடைந்தபோது 20 சதவீதம் பேர்தான் படிப்பறிவு பெற்றிருந்தனர். ஆனால் இப்போது 85 சதவீதம் பேர் படிப்பறிவு பெற்றுள்ளனர். அதிலும் புதுச்சேரியில் இது 90 சதவீதத்தையும் தாண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

விழாவில் கலெக்டர் அருண், துணை கலெக்டர் சஷ்வத் சவுரப், நேரு யுவகேந்திராவின் துணை இயக்குனர் பிரசன்னா, புதுவை ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story