குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை மங்களூரு பொதுக்கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை மங்களூரு பொதுக்கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
x
தினத்தந்தி 27 Jan 2020 11:32 PM GMT (Updated: 27 Jan 2020 11:32 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் உள்ள கூலூரில் பா.ஜனதா சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு இங்கு திரண்டுள்ள மக்கள் தான் சாட்சி. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தற்போது செயல்படுத்தி வருகிறோம். 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால் காஷ்மீர் மக்களும் சந்தோசத்தில் உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு விரைவில் நனவாக போகிறது. காஷ்மீர் மக்களை பாதுகாப்பது நமது கடமை. முத்தலாக் தடை சட்டமும் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் பாகுபாடு இன்றி ஒரே இந்தியா, ஒரே பிரதமர், ஒரே மக்கள் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 370-வது சட்டப்பிரிவு ரத்தை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுபோல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளால் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை சகித்துகொள்ள முடியவில்லை. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்டத்தை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 70 ஆண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாத சாதனையை, கடந்த 6 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செயல்படுத்தி உள்ளது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களை போராட தூண்டிவிட்டு வருகின்றன. நான் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த போது வங்காளத்தை சேர்ந்த 600 முஸ்லிம்கள், இந்திய பிரஜையாக அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், ஷோபா எம்.பி., மங்களூரு, உடுப்பி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி பொதுக்கூட்டம் நடந்த இடத்தை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி மங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது. இதனால் மங்களூரு-உடுப்பி தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மங்களூரு சென்டிரல் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களும், வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன.

Next Story