அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலைக்கு திட்டம் தீட்டிய 7 பேர் கைது


அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலைக்கு திட்டம் தீட்டிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 8:20 PM GMT)

அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொலை வழக்கில் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீரனூர், 

கீரனூர் அருகே உள்ள காரப்பட்டையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (வயது 70). இவரையும், இவரது மகன் முத்துவையும் கடந்த ஆண்டு நமணராயசத்திரத்தை சேர்ந்தவரும், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான மூர்த்தி (51) தரப்பை சேர்ந்தவர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் மூர்த்தி கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 22-ந் தேதி களமாவூர் பகுதியில் உள்ள டீக்கடையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், மூர்த்தியை வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கீரனூர் போலீசார் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடி வந்தனர்.

மேலும் இது தொடர்பாக வீராச்சாமி தரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் கிள்ளனூரை சேர்ந்த பாக்கியராஜ், மாரிமுத்து, ஆனந்த் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மூர்த்தியை கொலை செய்த கூலிப்படையினரான மதுரை கொட்டக்கூடி பழனிக்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த பிரபு, திடீர்நகரை சேர்ந்த அருள்முருகன், திருச்சி சமயநல்லூர் கண்ணன், ஜெயந்திபுரம் ராஜா, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஆறுமுகம், வானாமலை, திம்மராஜபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி, பாளையங்கோட்டையை சேர்ந்த உடையார், சிவகங்கையை சேர்ந்த கோபிகிரு‌‌ஷ்ணன் ஆகிய 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கொலை செய்யப்பட்ட வீராச்சாமியின், மருமகன்கள் கிள்ளனூரை சேர்ந்த பாக்கியராஜ், திருச்சி செங்குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மாரிமுத்துவின் கல்லூரி நண்பரான ஆனந்த் (35), சிவகங்கையை சேர்ந்த கோபிகிரு‌‌ஷ்ணன் (27), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பிரபு (45), சமயநல்லூரை சேர்ந்த கண்ணன் (44), ஜெயந்திபுரத்தை சேர்ந்த ராஜா (37) ஆகிய 7 பேர் மீதும் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கூலிப்படையினரை ஏற்பாடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு கீரனூர் குற்றவியல் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இரவோடு இரவாக புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மூர்த்தியை கொலை செய்தவர்களையும் பிடித்து விட்டோம். விரைவில் அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story