‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வழித்தடங்கள் அழிப்பு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வழித்தடங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:30 PM GMT (Updated: 29 Jan 2020 9:18 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வழித்தடங்கள் அழிக்கப்பட்டன.

மெலட்டூர், 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள கோவத்தகுடி, கொத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவது அதிகரித்தது. இதன் காரணமாக ஆற்றில் இருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெண்ணாற்றின் கரையோர பகுதிகளில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளங்களை ஏற்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பள்ளங்களால் மணல் அள்ள வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவத்தகுடி மற்றும் கொத்தங்குடி பகுதியில் வெண்ணாற்றில் அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story