தஞ்சை மாவட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்


தஞ்சை மாவட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 8:08 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கள்ளப்பெரம்பூர், 

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தஞ்சை ஒன்றிய செயலாளர் மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர் அபிமன்னன், வல்லம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் முகமது ரபீக், மேலப்பள்ளிவாசல் இமாம் உபயதுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல பூதலூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.வை சேர்ந்த சுபானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஜாகிர்உசேன், ஜமாத்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற போராட்டத்திற்கு பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். திருக்காட்டுப்பள்ளி முஸ்லிம் உறவின்முறை ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவையாறு முதல் கண்டியூர் வரை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு தி.மு.க. சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், மாவட்ட கவுன்சிலர் வெங்கடசாமி, ஜமாத் தலைவர் ராஜாமுகமது, ஜமாத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இருந்து ரெயில் நிலையம் வரை இந்த மனித சங்கிலிபோராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமை தாங்கினார். மனித சங்கிலியில் ஏராளமான முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் தேசிய கொடியும் வைத்திருந்தனர்.

இதே போல் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story