கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவுக்கு சென்று வந்த 4 பேர் தொடர் கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவுக்கு சென்று வந்த 4 பேர் தொடர் கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2020 10:00 PM GMT (Updated: 4 Feb 2020 4:13 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, சீனாவுக்கு சென்று வந்த 4 பேர் வீடுகளில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி,

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முன்னோடியாக அமலுக்கு வந்து உள்ளது. முதல் நாளில் 41 பேர் வேறு கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளனர். 2-வது நாளில் 121 பேர் வேறு கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளனர். இதுவரை எந்தவித தொழில்நுட்ப பிரச்சினைகளும் ஏற்படவில்லை.

ஒவ்வொரு கடைகளுக்கும் கூடுதலாக 5 சதவீதம் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் இருப்பு விவரங்களை அறிந்து பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதுவும் இல்லை. மக்கள் பயப்பட தேவை இல்லை. அதே நேரத்தில், சீனாவுக்கு 4 பேர் சென்று வந்தனர். அவர்கள் ஏற்கனவே விமான நிலையத்தில் பரிசோதனைகள் முடித்து வந்தனர். ஆனாலும் அவர்களை தொடர்ந்து வீடுகளில் வைத்து கண்காணித்து வருகிறோம். தினமும் டாக்டர்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்தவிதமான அறிகுறிகளும் கிடையாது.

அதேபோன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மாலுமிகளை பரிசோதனை செய்வதற்காக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. நோயின் தாக்கம் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அறிகுறியுடன் யாராவது வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம். இந்த வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் இருந்தால் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். முறையாக கைகழுவ வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். இதற்கான அறிக்கைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 8 பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில் 2 பிரிவுகளில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசு அனுமதி கிடைத்த உடன் நிலம் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படும். ஒரு மாதத்துக்குள் நிலம் கொடுக்கப்பட்டு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் சூழல் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story