நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு அதிகாரிகள் தகவல்


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 8:07 PM GMT)

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் மூலம் கிராமங்களில் தனியார் வீடுகள் மற்றும் பொது இடங்களில் உறிஞ்சிக்குழி, விவசாய விளைநிலங்களில் மண்வரப்பு அதிகரித்தல், பண்ணை குட்டை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இதுதவிர நொய்யல் ஆறு, அவற்றின் கிளை ஓடைகள், கவுசிகா நதி ஆகியவற்றில் தடுப்பணைகள், நீர் உறிஞ்சும் கிணறுகள் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. விவசாய நிலத்தில் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுவதால், கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

87 பண்ணை குட்டைகள்

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறு குறு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவசாய நிலத்தில் 15 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2018-19-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 56 லட்சத்தில் 264 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட் டன. இந்த ஆண்டில் ரூ.75 லட்சத்தில் 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தற்போது வரை 17 பண்ணை குட்டைகள் அமைத்து முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் மீதமுள்ள பண்ணை குட்டைகள் அமைத்து முடிக்கப்படும்.

விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டு உள்ள பண்ணை குட்டைகள் அனைத்துமே நிரம்பி வழிந்ததால், விவசாய நிலத்தில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. 5 ஏக்கர் வரை விவசாய விளை நிலங்கள் வைத்து இருக்கும் விவசாயிகள் தோட்டத்தில் இந்த பண்ணை குட்டை அமைத்து கொடுக்கப்படும். இதற்கு தகுதியான விவசாயிகள் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story