திருச்சி ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை


திருச்சி ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2020 10:30 PM GMT (Updated: 8 Feb 2020 7:55 PM GMT)

திருச்சி ஓட்டல் அறையில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் உருக்கமான கடிதம் சிக்கியது.

திருச்சி,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த கணேசனின் மகன் கார்த்திக் (வயது 35). இவர் ‘பர்னிச்சர்’ கடை நடத்தி வந்தார். கார்த்திக் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் கார்த்திக் கடந்த 4-ந் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கியிருந்த அறை கதவு 2 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் அவரது அறையில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இது குறித்து ஓட்டல் ஊழியர்கள், கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

கடிதம் சிக்கியது

பின்னர் பூட்டியிருந்த அறை கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு உடல் அழுகிய நிலையில் கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதால், தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அவர் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் தற்கொலை செய்த கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்ேடான்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story