கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்துகேட்பு கூட்டம்


கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்துகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2020 10:45 PM GMT (Updated: 8 Feb 2020 10:06 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்பதை தடுப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையத்தில் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இங்குள்ள ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூகவிரோதிகள் பலர் சாராயம் காய்ச்சி அதனை கள்ளக்குறிச்சி பகுதி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சாராயம் காய்ச்சுவதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வதை தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கல்வராயன்மலையில் உள்ள கச்சிராயப்பாளையம் அருகே வெள்ளிமலை கிராமத்தில் நடைபெற்றது.

இதற்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமை தாங்கினார். மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்வராயன்மலையில் உள்ள 177 மலை கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவிகள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் பேசியதாவது:- சாராயம் குடிப்பதால் இளைஞர்கள் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க முடியும். சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை போலீசார் செய்வர். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story