நெல்லை தாமிரபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு


நெல்லை தாமிரபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Feb 2020 11:00 PM GMT (Updated: 9 Feb 2020 9:59 PM GMT)

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் நேற்று ஆய்வு செய்தார்.

நெல்லை,

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக சென்னையில் இருந்து மதுரை வரை அமைக்கப்படுகிறது. தொடர்ந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

தற்போது பட்ஜெட்டில் இரட்டை ரெயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஒரு சில இடங்களில் இரட்டை ரெயில் பாதை செல்லும் இடங்களில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை கொக்கிரகுளம் அருகே உள்ள குருந்துடையாார்புரம் தாமிரபரணி ஆற்று பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு

இந்த பாலம் கட்டும் பணிகள் முடியவில்லை. இதனை ஆய்வு செய்வதற்கு பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் நேற்று காலை நெல்லை வந்தார். அவர் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆய்வு செய்தார்.

குருந்துடையார் ஆற்று மேம்பாலத்தின் தன்மையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள சிக்னல்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்கு நடைமேடைகள், குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

அப்போது ரெயில் நிலைய மேலாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story