கோத்தகிரியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி


கோத்தகிரியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி
x
தினத்தந்தி 14 Feb 2020 10:15 PM GMT (Updated: 14 Feb 2020 6:23 PM GMT)

கோத்தகிரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடைபெற்றது.

கோத்தகிரி,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. மேலும் தென்னிந்தியாவிலும் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்பினர், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோத்தகிரியில் நேற்று மாலை 3 மணியளவில் பேரணி நடைபெற்றது. பேரணியானது காமராஜர் சதுக்கத்தில் இருந்து தொடங்கியது. அதனை கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணன் தொடங்கி வைத்தார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

பேரணியானது மார்க்கெட் திடல் வழியாக பஸ் நிலையத்துக்கு சென்று, மீண்டும் மார்க்கெட் திடலுக்கு வந்து நிறைவடைந்தது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தி இருந்ததுடன், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பியபடி சென்றனர். பின்னர் மார்க்கெட் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

இதேபோன்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குன்னூர் வி.பி. தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story