விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் - மயங்கி விழுந்து முதியவர் சாவு


விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் - மயங்கி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 16 Feb 2020 10:45 PM GMT (Updated: 16 Feb 2020 5:20 PM GMT)

விசுவக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர். இதில் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தின் வயல் வெளிப்பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டு தகுதியான காளைகளை தேர்வு செய்து டோக்கன் வழங்கினர். இதேபோல் விழாவில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் உடல் தகுதி சான்றுகளையும் டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கிரிதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஆத்தூர், சேலம், தம்மம்பட்டி, மல்லியகரை, வீரகனூர், கெங்கவல்லி, தொண்டமாந்துறை, அன்னமங்கலம், விசுவக்குடி, சமயபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 464 காளைகள் கலந்து கொண்டது.

இதில் மாடுபிடி வீரர்கள் 270 பேர் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விழாவில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டை காண பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(வயது 70) என்ற முதியவர் வந்திருந்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த பெருமாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அருகில் இருந்த மருத்துவ குழுவினர் தூக்கி முதலுதவி சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அரும்பாவூர் போலீசார் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story