மன்னார்குடியில் பெண்களிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது


மன்னார்குடியில் பெண்களிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 6:59 PM GMT)

மன்னார்குடியில் பெண்களிடம் சங்கிலி பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதனையடுத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மன்னார்குடி மூன்றாம் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலி பறிக்க முயன்றவர்களை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை மன்னார்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

இதை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மன்னார்குடியை அடுத்த தென்பரையை சேர்ந்த முருகேசன் (23), ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (20), கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் மன்னார்குடி பகுதியில் பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 பவுன் சங்கிலியையும், திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story