குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ஊட்டியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ஊட்டியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 4:56 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், சட்டங்களை திரும்ப பெறக்கோரி மற்றும் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஊட்டியில் முஸ்லிம்கள் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு சென்றனர்.

தொழுகை முடிந்த பின்னர் லோயர் பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசல் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கு ஆவணங்களை காண்பிக்க மாட்டோம், மத ரீதியாக மக்களை பிரிக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி நின்றனர்.

ஊட்டியில் காந்தல், பிங்கர்போஸ்ட், லோயர் பஜாரில் உள்ள 3 பள்ளிவாசல்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story