பவானி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி 2 பெண்கள் சாவு 7 பேர் படுகாயம்


பவானி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி 2 பெண்கள் சாவு 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 5:57 PM GMT)

பவானி அருகே தடுப்பு சுவரில் கார் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பவானி,

சேலம் மாவட்டம் பழையசூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜு. அவருடைய மனைவி ஜோதி (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் விஜயவர்மன். அவருடைய மனைவி கவுரி (33). இவர்கள் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் மகா சிவராத்திரியையொட்டி ஜோதி, கவுரி உள்பட 8 பேர் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று காலை அனைவரும் காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

தடுப்புச்சுவர் மீது மோதியது

காரை பழையசூரமங்கலம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (35) என்பவர் ஓட்டினார். இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே அதிகாலை 4.30 மணி அளவில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் கார் ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதி உருண்டு மறுபுறம் உள்ள சேலம் பைபாஸ் ரோட்டில் விழுந்தது. இதில் காரில் இருந்தவர்கள் அய்யோ, அம்மா என்று சத்தம் போட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி ஜோதி, கவுரியும் பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம்

காரில் இருந்த தேவதிஷா, சுவர்ணலஹரி, சுதாதேவி, லட்சுமி, ஜீவிதா, மித்ரா, டிரைவர் நவீன்குமார் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கதறல்

படுகாயம் அடைந்த 7 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story