லாரி-பஸ் மோதல்; 2 பேர் சாவு 16 பேர் படுகாயம்


லாரி-பஸ் மோதல்; 2 பேர் சாவு   16 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Feb 2020 10:45 PM GMT (Updated: 26 Feb 2020 7:24 PM GMT)

மதுராந்தகம் அருகே லாரி-பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை, 

சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் பஸ் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவராக தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ் (வயது 35) இருந்தார். பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அதியமானம் என்ற இடத்தில் செல்லும்போது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த சென்னை செங்குன்றத்தை அடுத்த எல்லையம்மன் பேட்டையை சேர்ந்த முருகேச மணி (வயது 44), திருச்செந்தூர் மதன்குறிச்சியை சேர்ந்த முத்துபெருமாள் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

16 பேர் படுகாயம்

டிரைவர் முத்துராஜ், பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மகேந்திரன், முருகன், கோபாலகிருஷ்ணன், அருணகிரி, ராஜசேகர், புஷ்பராணி, பிரசன்னா, பாலகிருஷ்ணன், திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார். சுப்பிரமணி, புஷ்பராணி, சென்னை எர்ணாவூரை சேர்ந்த செல்வம், தூத்துக்குடியை சேர்ந்த ஆனந்தன், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜெயமோகன், முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த இருவரது உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story