தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 March 2020 11:00 PM GMT (Updated: 1 March 2020 5:17 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந் தேதி நடைபெற்றது.

6-ந் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜை தொடங்கியது. மண்டலாபிஷேகம் வழக்கமாக 48 நாட்கள் நடைபெறும். ஆனால் சித்திரை திருவிழாவுக்காக மண்டலாபிஷேகம் 24 நாட்களாக குறைக்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் மூலவர் மூர்த்திகளுக்கு பால் மற்றும் எண்ணெய் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

அபிஷேகம்

நிறைவுநாளையொட்டி முதல்கால யாகசாலை பூஜை நேற்றுமுன்தினம் மாலை தொடங்கியது. இதற்காக பெரியகோவில் வளாகத்தில் நடராஜர் சன்னதி முன்பு யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகிஅம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகாபூர்ணாஹூதி நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

நேற்றுஅதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களுடன் பிரகாரத்தை சுற்றி வந்தனர். தொடர்ந்து 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிஅம்மன் உள்பட மூலவர் மூர்த்திகளுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு, கடத்தில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள்

பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு நாள் என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. 24 நாட்களில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றாலும் மீதி உள்ள 24 நாட்களும் மூலவர் மூர்த்திகளுக்கு பால் மற்றும் எண்ணெய் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்படும் என சிவாச்சாரியார் தெரிவித்தார்.

மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story