அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட திறப்பு விழா: கரூர் வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட திறப்பு விழா: கரூர் வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 4 March 2020 11:30 PM GMT (Updated: 4 March 2020 9:15 PM GMT)

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறக்க கரூருக்கு இன்று வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் காந்திகிராமத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.155½ கோடி மதிப்பிலான புதிய கட்டிட பணிகள் முடிந்து தயார் நிலையில் இருக்கின்றன. அதன் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க உள்ளார்.

முதல்-அமைச்சருக்கு, கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அதன் செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் மதியம் 12.30 மணியளவில் கரூர் காந்தி கிராம அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் வருகை தந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

போலீசார் சோதனை

அங்கு நிகழ்ச்சி முடிவடைந்ததும் காரில், தாந்தோணிமலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி மதிய உணவு அருந்தி ஓய்வெடுக்கிறார். பின்னர் மதியம் 3 மணியளவில் காரில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு முதல்-அமைச்சர் செல்கிறார். முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக அமராவதி பாலம், பசுபதிபாளையம் பாலம், தாந்தோணிமெயின்ரோடு, கோவை ரோடு, மனோகரா கார்னரில் அ.தி.மு.க. கொடி-தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story