தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 32 பேர் காயம்


தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 32 பேர் காயம்
x
தினத்தந்தி 9 March 2020 12:00 AM GMT (Updated: 8 March 2020 8:07 PM GMT)

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, மாதாக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. நேற்று தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். காளைகளை அடக்க வந்திருந்த மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். பரிசோதிக்கப்பட்ட பின்னர் சுழற்சி முறையில் வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்ட னர்.

வீரர்களுக்கு பரிசு

அதன்பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் திமிலைபிடிக்க வீரர்கள் துணிச்சலாக சென்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் காளையை பிடித்தபோது காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு காளையை ஒரு வீரர் பிடித்தால் மட்டுமே மாடு பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டு பரிசு பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட் களை அதன் உரிமையாளர்கள் பெற்று கொண்ட னர்.

காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, அயன்பாக்ஸ், குக்கர், குத்து விளக்கு, வெள்ளிக்காசு, ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காலை 8.10 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணிக்கு முடிவடைந்தது.

732 காளைகள்

ஜல்லிக்கட்டிற்கு வந்திருந்த 732 காளைகளும் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. 323 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். காளைகள் முட்டியதில் வீரர்கள் 24 பேரும், பார்வையாளர்கள், மாட்டை பிடித்து சென்றவர்கள் என 8 பேரும் என மொத்தம் 32 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இவர்களில் பலத்த காயம் அடைந்த வீரர், பார்வை யாளர்கள் என 10 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப் பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினையும் எடுத்துக்கொண்டனர். 

Next Story