மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா: திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு


மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா: திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 8 March 2020 11:00 PM GMT (Updated: 8 March 2020 10:46 PM GMT)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழாவையொட்டி நேற்று திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

விழாவில் முக்கிய வழிபாடான மகா பூஜை எனப்படும் வலியபடுக்கை பூஜை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்தது.

பொங்கல் வழிபாடு

நேற்று 8-ம் நாள் கொடையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல் ஆகியவை நடந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்தனர். மேலும், திரளான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பொங்கலிடும் பகுதியில் இடம் இல்லாததால் சிலர் அருகில் உள்ள தோப்புக்களில் கூட்டம் கூட்டமாக பொங்கலிட்டனர்.

இதனால் பொங்கலிடும் பகுதி, மண்டைக்காடு சந்திப்பு, கடற்கரை மற்றும் கோவில் பிரகார வளாகம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் வசதிக்காக நேற்று கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மதியம் 1 மணிக்கு உச்சபூஜை நடந்தது.

சந்தன குட ஊர்வலம்

மாலையில் காட்டுவிளை ஆதிதிராவிடர் காலனி சிவசக்தி கோவிலில் இருந்து சந்தன குட ஊர்வலமும், செம்பொன்விளை அய்யா பதியிலிருந்து யானை மீது சந்தன குட ஊர்வலமும், நெட்டாங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து சந்தன குட ஊர்வலமும் புறப்பட்டு மண்டைக்காடு கோவிலை வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல் ஆகியவை நடந்தது.

ஒடுக்கு பூஜை

மாசிக்கொடையின் மற்றொரு முக்கிய வழிபாடான பெரிய சக்கர தீவெட்டி பவனி இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு நடக்கிறது. இறுதி நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் கொடை விழா நிறைவடைகிறது.

Next Story