ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டு எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டு எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 March 2020 10:30 PM GMT (Updated: 9 March 2020 7:22 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டு எழுப்பிய கோஷத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசியில் வசிக்கும் கணேஷ் என்பவரின் ரேஷன்கார்டு மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி கடந்த 2008-ம் ஆண்டு கேரள மாவோயிஸ்டுகளான அனுப் மேத்யு ஜார்ஜ் மற்றும் ஜாமீனில் உள்ள சைனி ஆகியோர் சிம்கார்டு வாங்கியது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று அனுப் மேத்யு ஜார்ஜை கோவை போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் ஜாமீனில் உள்ள சைனியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் போலீசார் மாவோயிஸ்டு அனுப் மேத்யு ஜார்ஜை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அப்போது அவர், “ஜிந்தாபாத், ஜிந்தாபாத், மாவோயிசம் ஜிந்தாபாத், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் வெல்லட்டும்” என்று கோஷம் எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

Next Story