அ.தி.மு.க.வில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை - தங்க தமிழ்செல்வன் பேட்டி


அ.தி.மு.க.வில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை - தங்க தமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 10:10 PM GMT)

அ.தி.மு.க.வில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே எழுமலை பக்கம் உள்ளது மல்லப்புரம்-மயிலாடும்பாறை மலைச்சாலை. இந்தச்சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து 7 கிலோ மீட்டர் உள்ள மலைச்சாலையில் 5 கி.மீ தூரத்தில் மட்டும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மலைப்பாதையில் சாலை ஓரமாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிறு, சிறு செடி கொடிகள் மற்றும் மண் சரிவை சரிசெய்து விட்டு சாலையை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வன் அந்தச் சாலையை ஆய்வு செய்தார். அப்போது வனத்துறையினரை அலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மண் சரிவு மற்றும் சிறு சிறு முட்செடிகளை அகற்ற வேண்டும் என்றும், அதன்பிறகு சாலை சீரமைப்பு பணிகளை செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மல்லப்புரம்-மயிலாடும்பாறை மலைச்சாலையை போக்குவரத்திற்கு உகந்த வகையில் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களும் முறைப்படி சாலையை அமைப்பதாக கூறினர்.

தமிழகத்தில் இரு தலைவர்கள் மறைந்து விட்டதால் அரசியலில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை. வெற்றிடமாகத் தான் உள்ளது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலின் தனது தலைமையை நிரூபித்துள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் தான் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. மக்கள் வரவேற்று அழைக்கட்டும் என்று ரஜினிகாந்த் கூறுகிறார். அவர் முதலில் களத்தில் இறங்கட்டும். அடுத்து பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story