சென்னை விமான நிலையத்தில் 1¼ கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில்   1¼ கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 March 2020 12:30 AM GMT (Updated: 15 March 2020 12:30 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா பானு (வயது 28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.20 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 468 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.53 லட்சம் தங்கம் பறிமுதல்

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த கோவையைச் சேர்ந்த செல்வி சுப்பிரமணி (30) என்பவரை சோதனை செய்தபோது, அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் தங்க சங்கிலிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நைனாமுகமது(40), ராவுத்தர் நைனா முகமது (38) ஆகியோர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 387 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து ரூ.53 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 205 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story