கொரோனா வைரஸ் பீதியால் கர்நாடகத்தில் 2-வது நாளாக மக்கள் வீட்டுக்குள் முடங்கினர் பெங்களூருவில் பல்பொருள் அங்காடிகளை திறக்க மாநகராட்சி அனுமதி


கொரோனா வைரஸ் பீதியால் கர்நாடகத்தில் 2-வது நாளாக மக்கள் வீட்டுக்குள் முடங்கினர் பெங்களூருவில் பல்பொருள் அங்காடிகளை திறக்க மாநகராட்சி அனுமதி
x
தினத்தந்தி 16 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 12:00 AM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் கர்நாடகத்தில் 2-வது நாளாக மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். பெங்களூருவில் பல்பொருள் அங்காடிகளை திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கலபுரகியை சேர்ந்த முதியவர் உயிர் இழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள வணிகவளாகங்கள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகளை ஒரு வாரத்திற்கு மூடவும், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள வணிகவளாகங்கள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி உள்ளனர். பெங்களூருவில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் ஸ்தம்பித்து போய் இருந்தது.

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் இல்லாமல் அமைதி நிலவியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. லால்பாக், கப்பன் பூங்காவில் குறைந்த அளவே மக்கள் நடமாட்டம் இருந்தது. பெரும்பாலான பூங்காக்கள் திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் குறைந்த அளவே நேற்று இயக்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் குறைந்த அளவே கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டன.

குறிப்பாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் ஆட்டோ, வாடகை கார்கள் ஓட்டம் இல்லை. இதனால் டிரைவர்கள் பரிதவித்தனர். ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகளை எதிர்பார்த்து பல மணிநேரம் ஆட்டோ, வாடகை கார்களின் டிரைவர்கள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஏராளமான டிரைவர்கள் ஒரு சவாரி கூட செல்ல முடியவில்லை என்று கூறினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக மெட்ரோ ரெயில்களில் தினமும் 4 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். நேற்று முன்தினம் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தான் பயணம் செய்திருந்தனர். நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும் மெட்ரோ ரெயில்களில் நேற்று முன்தினத்தை விட குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்திருந்தார்கள். இதனால் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கும் கொரோனா வைரசால் பெரும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிராய்லர் கோழிகளால் கொரோனா வைரஸ் பரவுவதாக பீதி ஏற்பட்டுள்ளதால், கோழி விற்பனை மிகவும் சரிவடைந்துள்ளது. பெலகாவியில் இலவசமாக கோழிகளை வியாபாரிகள் வழங்கினார்கள். கோழி விற்பனை சரிவடைந்திருப்பதால் வியாபாரிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோழி வியாபாரிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக காய்கறி விலையும் 20 சதவீதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் காய்கறிகள் வாங்க மக்கள் மார்க்கெட்டுக்கு வருவதில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூரு, மைசூரு, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மிருகக்காட்சி சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பெங்களூரு புறநகரில் உள்ள பன்னரகட்டா உயிரியில் பூங்காவுக்கு நேற்று முதல் ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து வனத்துறை மந்திரி ஆனந்த் சிங் கூறுகையில், "கொரோனா வைரஸ் பீதி காரணமாக பன்னரகட்டா உயிர் பூங்கா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகளும் இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 21-ந் தேதி வரை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் குழந்தைகளுடன் உயிரியல் பூங்காவுக்கு பெற்றோர் திரண்டு வரவாய்ப்புள்ளதால் முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வணிகவளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும், பொது நிகழ்ச்சி தடை விதித்திருப்பதாலும், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதாலும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலமே 2-வது நாளாக முடங்கி போய் உள்ளது.

இதற்கிடையில், பெங்களூருவில் பல்பொருள் அங்காடிகளை (சூப்பர் மார்க்கெட்) மட்டும் திறந்திருக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி உட்பட்ட பகுதியில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளை மட்டும் திறக்கலாம் என்றும், அங்கு வருபவர்களின் பாதுகாப்புக்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் தடை விதித்து மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து நீச்சல் குளங்களில் குளிக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Next Story