தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி, வாழை இலை விலை குறைந்தது


தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி, வாழை இலை விலை குறைந்தது
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 2:52 PM GMT)

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி, வாழை இலை விலை குறைந்து விற்பனையானது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி, வாழை இலை விலை குறைந்து விற்பனையானது.

விலை குறைந்தது 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். காய்கறி விலையிலும் சரிவு ஏற்பட்டு உள்ளது.

வாழை இலை 

அதன்படி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30–க்கும், தக்காளி ரூ.15–க்கும், மிளகாய் ரூ.15–க்கும், வெண்டைக்காய் ரூ.25–க்கும், சீனி அரைக்காய் ரூ.15–க்கும், உருளைக்கிழங்கு ரூ.25–க்கும், கேரட் ரூ.25–க்கும், முட்டைகோஸ் ரூ.15–க்கும், பீட்ரூட் ரூ.10–க்கும், சவ்சவ் ரூ.15–க்கும், சேனைக்கிழங்கு ரூ.15–க்கும், பூசனி ரூ.10–க்கும், காளிபிளவர் ரூ.20–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதே போன்று கொரோனா வைரஸ் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் வாழை இலைக்கட்டுகள் வெளியூருக்கு செல்வது குறைந்து உள்ளது. அதே போன்று பல கடைகள் மூடப்பட்டு இருப்பதாலும் வாழை இலைகளை வெளியூரில் வாங்குவது குறைந்து உள்ளது. இதனால் வாழை இலைக் கட்டுகள் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டன.

வியாபாரி கருத்து 

இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறும் போது, கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மார்க்கெட்டுக்கு மக்கள் வரத்து குறைந்து உள்ளது. அதன் காரணமாக காய்கறி விலையும் சரிந்து உள்ளது, என்று கூறினார்.

Next Story