மக்கள் ஊரடங்கு; நகரங்கள் முழுவதும் வெறிச்சோடின


மக்கள் ஊரடங்கு; நகரங்கள் முழுவதும் வெறிச்சோடின
x
தினத்தந்தி 22 March 2020 11:15 PM GMT (Updated: 22 March 2020 11:12 PM GMT)

மக்கள் ஊரடங்கையொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களும் முழு வதுமாக வெறிச்சோடி காணப்பட்டன.

காரைக்குடி, 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு மக்கள் ஊரடங்கு அறிவித்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி காரைக்குடி, சாக்கோட்டை, புதுவயல், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய இடங்களில் மக்கள் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி நகர் முழுவதும் ஆட்டோ, லாரி, பஸ், ரெயில் உள்ளிட்டவை இயங்கவில்லை.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான மருந்து, உணவு, பால் உள்ளிட்ட பொருட்களுக்காக மருந்துக்கடைகள், அம்மா உணவகம், ஆவின் பாலகம், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன. மேலும் மருத்துவமனை எவ்வித தடையுமின்றி செயல்பட்டது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு வீடுகளிலேயே இருந்தனர். இதனால் நகரில் முழு அமைதி நிலவியது.

மக்கள் ஊரடங்கைெயாட்டி கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டிருந்தன. கோவில்களில் சாமிகளுக்கு பூஜை மட்டும் நடைபெற்றது. இந்த நிலையில் புதுவயலில் ஒரு திருமண மண்டபத்தில், பெரியகோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காதணி விழா நடைபெற இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த குடும்பத்தினரை சந்தித்து அறிவுரை கூறிய பின்னர் விழா ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் வந்த சிலரை நிறுத்தி கொரோனா வைரஸ் பரவாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறி அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல் மானாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக மானா மதுரை புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், ஸ்டேட் பேங்க் ரோடு, அண்ணாசிலை, தேவர்சிலை, காந்திசிலை, சிப்காட் உள்ளிட்ட பிரதான பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் மானா மதுரை பகுதிகளில் நேற்று நடைபெற இருந்த சுப நிகழ்ச்சிகள் ஒத்திவைக் கப்பட்டன.

இதேபோல் திருப்புவனத்தில் சந்தை திடல் பகுதி, மணிமந்திர விநாயகர் கோவில் பகுதி ஆகியவை பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதிகளில் மக்களின் கூட்டம் எந்தநேரமும் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மக்கள் ஊரடங்கையொட்டி அப்பகுதிகள் வெறிச்சோடி இருந்தன. மேலும் திருப்புவனத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்து ஒத்துழைப்பு வழங்கினர். மேலும் இதையொட்டி நகரில் அனைத்து இடங்களும் வெறிச்சோடி கிடந்தன.

Next Story