ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் சொந்த செலவில் உணவு வழங்கிய கலெக்டர்


ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் சொந்த செலவில் உணவு வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 22 March 2020 11:15 PM GMT (Updated: 22 March 2020 11:15 PM GMT)

மக்கள் ஊரடங்கையொட்டி அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்ட நிலையில் தனது சொந்த செலவில் கலெக்டர் ஜெயகாந்தன், பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

சிவகங்கை, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவையொட்டி சிவகங்கை நகரில் நேற்று காலை முதல் நகரம் முழுவதுேம வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதையொட்டி ஓட்டல், மளிகைக்கடை, பூக்கடை, டீக்கடை உள்பட நகரின் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக நகரின் சில இடங்களில் மருந்து கடை மற்றும் பால் கடைகள் திறந்திருந்தன. மக்கள் ஊரடங்கையொட்டி நகர மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

சிவகங்கை பஸ் நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மருத்துவமனைகளில் டாக்டர்கள் வழக்கம் போல் பணிபுரிந்தனர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டன. சிவகங்கை நகரில் உள்ள கோவில்களில் அன்னதானம் வழங்குவது தடைபட்டதால், அங்கு சாப்பிடுபவர்கள் மற்றும் தினசரி கடைகளில் உணவு சாப்பிடுபவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கலெக்டர் ஜெயகாந்தன் தனது சொந்த செலவில் உணவு தயாரித்து கோவில், பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இருந்த பொதுமக்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் பட்டியலை விமானநிலையம் மூலம் பெற்று, அவர்கள் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் பொது சுகாதாரத்துறையின் ஆலோசனையின் படி வருகிற 31-ந்தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் 31-ந்தேதி வரை நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வாரச்சந்தை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. மேலும் தேவாலயங்களில் நேற்று திருப்பலி ரத்து செய்யப்பட்டது. காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் நடைபெறும் வாரச்சந்தை ரத்துசெய்யப்பட்டது. காளையார்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும் கல்லல் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் முற்றிலுமாக வாகன போக்குவரத்து தடைபட்டது. கல்லல் மெயின் ரோடு, இந்திராநகர் உள்பட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story