வந்தவாசி அருகே, காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
வந்தவாசி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா சோகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது23). இவர் கடந்த ஆண்டு சென்னையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அப்போது இவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கல்பாக்கத்தை சேர்ந்த கோமதி(19) என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் சோகத்தூர் கிராமத்தில் பிரசாந்த் வீட்டிலேயே வசித்து வந்தனர். பின்னர் 3 மாதங்களாக அதே கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் பிரசாந்த் கூலிவேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் கோமதி புடவையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பிரசாந்த் கோமதியின் உடலை கீழே இறக்கிவைத்துவிட்டு, அதே இடத்தில் அவரும் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story