காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 30 March 2020 10:30 PM GMT (Updated: 30 March 2020 9:55 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், நரசிம்மன், அலெக்சாண்டர், விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, சுகாதார பணிகள் இணை இயக்குனர்கள் ஜவகர்லால், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அமைச்சர் பென்ஜமின் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் இதுகுறித்து யாரும் பீதியடைய வேண்டாம். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளித்தார்.

அதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடந்தது.

இதில் அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story