திருச்சி காவிரி பாலத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்


திருச்சி காவிரி பாலத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 31 March 2020 9:57 AM GMT (Updated: 31 March 2020 9:57 AM GMT)

திருச்சி காவிரி பாலத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கடைகள் குறைவாக இருந்ததால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மலைக்கோட்டை,

கொரோனா வைரஸ் பரவிவருவதையொட்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியே வர ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க ஏராளமானோர் திரண்டதை தொடர்ந்து, காந்தி மார்க்கெட் மூடப்பட்டது.

அதற்கு பதிலாக பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் தற்காலிக மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டன. மேலும் தென்னூர் உழவர் சந்தையும் மத்திய பஸ்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக திருச்சி நகரில் 8 இடங்களில் காய்கறி சில்லரை விற்பனை கடைகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி திருச்சி மேலப்புலிவார்டு சாலை மதுரம் மைதானம், தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலை அண்ணாவிளையாட்டு அரங்கின் முன்பகுதி, காவிரி ஆற்றுப்பாலம், அரியமங்கலம் எஸ்.ஐ.டி. மைதானம், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானம், சத்திரம் பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிக காய்கறிகள் விற்பனை சந்தைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இங்கு பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகள் வாங்கும் வகையில் தரையில் வட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை திருச்சி காவிரி பாலம் பகுதியில் சுமார் 225 கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று 6 கடைகள் மட்டுமே போடப்பட்டிருந்தது. இந்த கடைகளில் தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், இஞ்சி, உருளைக்கிழங்கு ஆகியவை மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதிலும் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை வந்த சிறிது நேரத்திலேயே தீர்ந்துவிட்டது. அதனால் அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்ததற்காக தக்காளி மட்டும் வாங்கிக்கொண்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோல மற்ற பகுதிகளுக்கும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதற்கிடையே காவிரி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மார்க்கெட்டை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

Next Story