சென்னையில், மளிகை பொருட்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு - தட்டுப்பாடு காரணமா?


சென்னையில், மளிகை பொருட்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு - தட்டுப்பாடு காரணமா?
x
தினத்தந்தி 31 March 2020 11:00 PM GMT (Updated: 31 March 2020 10:40 PM GMT)

சென்னையில் மளிகை பொருட்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.150-க்கும், வத்தல் ரூ.250-க்கும் விற்பனையாகிறது.

சென்னை, 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் என அத்தியாவசிய பொருட்களை விற்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை பொருட்களின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் மளிகைப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தற்போது ரூ.150-க்கு விற்பனையாகிறது. ரூ.80-க்கு விற்பனையான துவரம்பருப்பு ரூ.120-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பருப்பு ரூ.150-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலை பருப்பு ரூ.100-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல கடந்த வாரம் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தனியா (மல்லி) தற்போது ரூ.150-க்கு விற்பனையாகிறது. காய்ந்த மிளகாய் (வத்தல்) விலை ரூ.100 அதிகரித்து தற்போது ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.170-க்கு விற்பனையான சோம்பு ரூ.250-க்கும், ரூ.90-க்கு விற்பனையான வெந்தயம் ரூ.150-க்கும், ரூ.160-க்கு விற்பனையான பூண்டு ரூ.240-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு வர லாரி டிரைவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே மளிகைப் பொருட்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது பெருமளவு உயர்ந்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தடையும் இல்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தவிர காய்கறி ஏற்றி வரும் லாரிகளுக்கு சுங்க கட்டணம் விதிக்கப்படுவது இல்லை. ஆனாலும் சூழ்நிலையை பயன்படுத்தி வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இடர்பாடான இந்த சூழலில் இதுதான் சமயமென்று மளிகைப் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்கிறார்கள். மொத்த வியாபாரிகளே இந்த நிலை என்றால் சில்லரை வியாபாரிகளுக்கு சொல்லியா தரவேண்டும்? அவர்களும் மனம் போன போக்கில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து சில்லரை வியாபாரிகள் கூறுகையில், ‘மொத்த வியாபாரிகளிடமிருந்து நாங்களே வண்டி எடுத்துச் சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் நிர்ணயித்த விலைக்கு தான் நாங்கள் வாங்கவேண்டிய சூழல் இருப்பதால் விலையை கூடுதலாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Next Story