பொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதி: காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது


பொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதி: காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது
x
தினத்தந்தி 8 April 2020 10:30 PM GMT (Updated: 8 April 2020 8:15 PM GMT)

பொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதிக்கப்படுவதால், காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது.

ஈரோடு,

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரம் நடக்கிறது. காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். சரியாக 9 மணிக்கு மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் அதிகபட்சமாக 9.30 மணிக்குள் அனைவரும் வெளியேறி விடுகிறார்கள். காலை நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால், மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மேட்டூர்ரோட்டின் நுழைவு வாயில் பகுதியிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையின் எதிரொலியாக மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது.

மேட்டூர்ரோட்டில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நடந்து சென்றார்கள். அதன்பின்னர் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிவிட்டு செல்கிறார்கள்.

இதேபோல் சத்திரோடு பகுதியில் உள்ள பஸ் நிலைய வளாகத்தில் பழக்கடைகள் போடப்படுகிறது. அங்கு முறையான வரிசை கடைபிடிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக செல்வதை நேற்றும் காணமுடிந்தது. கடைகளை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டமாக நின்றதால், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. எனவே பழ மார்க்கெட்டிலும் பொதுமக்கள் வரிசையாக செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும்.

Next Story