தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று கண்டறிய மாதிரி எடுக்கும் மையம் - கலெக்டர் பார்வையிட்டார்


தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று கண்டறிய மாதிரி எடுக்கும் மையம் - கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 11 April 2020 10:30 PM GMT (Updated: 11 April 2020 7:08 PM GMT)

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று கண்டறிய சளி மாதிரி எடுக்கும் மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார்.

தென்காசி, 

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உள்ளதா? என அறிய புதிதாக ஒரு மாதிரி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நோயாளிகளுக்கு மூக்கிலும், தொண்டையிலும் சளி மாதிரி எளிதில் பாதுகாப்பாக எடுக்க முடியும். இந்த புதிய சேகரிப்பு மையத்தில் சளி மாதிரி எடுக்கும்போது ஒரு கொரோனா தொற்று நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கோ அல்லது நோயாளியிடம் இருந்து மருத்துவமனை பணியாளர்களுக்கோ பரவ வாய்ப்பில்லை.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நலனுக்காக சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் ஆலோசனையின்படி இந்த புதிய வித்தியாசமான சளி மாதிரி சேகரிப்பு மையத்தை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உருவாக்கியுள்ளார். இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று பார்வையிட்டார்.

தானியங்கி அமைப்பு

இதுபற்றி டாக்டர் ஜெஸ்லின் கூறுகையில், கொரோனா தொற்றின் வீரியத்தையும், அது பரவும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் நலன் கருதியும், மருத்துவமனை பணியாளர்களின் நலன் கருதியும் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக புது முயற்சியாக இணை இயக்குனர் ஆலோசனையின்படி அனைத்து மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் இந்தப் புதிய சளி சேகரிப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம். இந்த மையத்தில் ஒரு நோயாளிக்கு சளி மாதிரி எடுத்தவுடன் 5 நிமிடத்தில் அந்த மையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் கூற அதை அப்படியே ஏற்று உடனடியாக வடிவமைத்துக் கொடுத்த அரசு பொறியாளர்கள் இப்ராஹிம், உதயகுமார் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்“ என்றார்.

Next Story