வேடசந்தூர் பகுதியில் சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் பரிதவிப்பு


வேடசந்தூர் பகுதியில் சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் பரிதவிப்பு
x
தினத்தந்தி 30 April 2020 3:25 AM GMT (Updated: 30 April 2020 3:25 AM GMT)

வேடசந்தூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் வருமானம் இன்றி பரிதவித்து வருகின்றனர்.

வேடசந்தூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சுயதொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் பார்வையற்றோர் பலரும் வேலையில்லாமலும், வருமானம் இன்றியும் பரிதவித்து வருகின்றனர்.

வேடசந்தூர் தாலுகாவில் கருப்பதேவனூர், சொக்கலிங்கபுரம், பூசாரிபட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 100-க்கும் மேற்பட்ட கண் பார்வையற்றோர்கள் உள்ளனர். இவர்கள் வயர் கூடை மற்றும் சேர் பின்னுதல், மெழுகுவர்த்தி, அகர்பத்திகள், கம்ப்யூட்டர் சாம்பிராணி, பினாயில், கிருமிநாசினி தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் தயாரிக்கும் பொருட்களை வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேரடியாக விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

வருமானம் இல்லை

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் வியாபாரத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி பரிதவிக்கும் அவர்கள், தற்போது அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் உணவுக்கு திண்டாடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் அவர்கள் தினசரி யாராவது உணவு பொட்டலம் கொண்டு வந்து தருவார்களா? என்று ஏங்கும் நிலையில் உள்ளனர். அவ்வப்போது தன்னார்வலர்கள் சிலர் பார்வையற்றோருக்கு ஒருசில உதவிகளை செய்து வருகின்றனர். ஆனாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

இதுகுறித்து வேடசந்தூர் ஞான ஒளி பார்வையற்றோர் சங்க பொறுப்பாளர் காளியப்பன் கூறுகையில், அடுத்தவர்களிடம் கையேந்தக்கூடாது என்பதற்காக சுயதொழில் செய்து வருமானம் ஈட்டி, உணவு தேவையை பூர்த்தி செய்து வந்தோம். இதற்கிடையே தற்போது ஒருமாத காலமாக ஊரடங்கு உத்தரவால் பார்வையற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு தலையிட்டு வேடசந்தூர் தாலுகா முழுவதும் உள்ள பார்வையற்றோருக்கு ஊரடங்கு முடியும் வரை உணவோ அல்லது அரிசி, மளிகை பொருட்கள் வழங்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


Next Story