தனிமை படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் வீடு, வீடாக காய்கறிகள் வினியோகம்


தனிமை படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் வீடு, வீடாக காய்கறிகள் வினியோகம்
x
தினத்தந்தி 6 May 2020 12:15 AM GMT (Updated: 6 May 2020 12:15 AM GMT)

குலசேகரம் அருகே தனிமை படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

குலசேகரம், 

குலசேகரம் அருகே தனிமை படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. காய்கறி, மளிகை பொருட்கள் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு

குலசேகரம் அருகே செறுதிக்கோணம், முல்லைபள்ளிவிளை பகுதியை சேர்ந்த ஒரு நர்சுக்கு சென்னையில் லேப் டெக்னீசியன் பணி கிடைத்தது. இதனையடுத்து அவர் கடந்த 29-ந் தேதி தன்னுடைய கணவருடன் சென்னைக்கு கார் மூலம் சென்றார். பணியில் சேரும் போது நர்சுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் செறுதிக்கோணம் கிராமத்திற்கு சென்று நர்சுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தினர். நர்சின் கணவர், அவருடைய 2 மாத குழந்தை உள்பட 12 பேரின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், நர்சுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், செறுதிக்கோணம் கிராமத்தை தனிமை படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

அதிகாரிகள் ஆய்வு

செறுதிக்கோணத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்தனர். சுகாதார பணியாளர்கள் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். வீடு வீடாக சென்று யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ளதா எனவும் கணக்கெடுத்தனர். செறுதிக்கோணம், முல்லைப்பள்ளிவிளை மற்றும் அதை சுற்றியுள்ள செக்குமூடு, புரவூர், அக்கம்விளை போன்ற பகுதிகளை சேர்ந்த 1,060 குடும்பத்தினரை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மளிகை பொருட்கள்

நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமாரி, குலசேகரம் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் அதிகாரிகள் செறுதிக்கோணம் பகுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு தேவையான பால், காய்கறி, மளிகை பொருட்கள் வீடு வீடாக கொண்டு செல்லப்பட்டது. அவற்றை பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்து வாங்கினர்.

நடமாடும் ஏ.டி.எம். வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிராமத்தில் உள்ள சிறு, சிறு பாதைகள் அனைத்தும் இரும்பு கம்பியால் மூடப்பட்டது.

கிராமத்தில் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கிராம மக்கள் கோரிக்கை

இதற்கிடையே கிராம மக்கள் அதிகாரிகளிடம் தங்களின் நிலைமை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, நாங்கள் மரவள்ளிக்கிழங்கு, வாழை நடுதல், ரப்பர் பால் வெட்டுதல், புல்அறுத்து விற்பனை செய்தல் போன்ற வேலை செய்து வருகிறோம். தற்போது, கிராமத்தை தனிமை படுத்தி, வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு அரசு மூலமாகவோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Next Story