டாஸ்மாக் கடைகளில் அனுமதி சீட்டுடன் வருபவர்களுக்கே மது விற்பனை செய்யப்படும்: கலெக்டர் தகவல்


டாஸ்மாக் கடைகளில் அனுமதி சீட்டுடன் வருபவர்களுக்கே மது விற்பனை செய்யப்படும்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 May 2020 11:00 PM GMT (Updated: 6 May 2020 8:46 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி சீட்டுடன் வருபவர்களுக்கே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுவாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கண்டிப்பாக வரிசையில் நிற்க வேண்டும். வரிசையில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மது வாங்க வரிசையில் நிற்கும்போது கும்பலாகவோ, கூட்டமாகவோ நின்று அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது.

ஏற்்கனவே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிற அனுமதிச்சீட்டை கொண்டு வருபவர்களுக்்கே மது வழங்கப்படும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் நீதிமன்ற உத்தரவின்படி மது வாங்க வரும் நபரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண் குறிப்பிட்டு விற்பனை ‘பில்’ போட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகத்தால் 3 வண்ணங்களில் அடையாள அட்டை அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி வாரத்தில் இருமுறை மட்டுமே குறிப்பிட்ட வண்ண அட்டை வைத்திருப்பவர் வெளியே வர முடியும்.

வீண் கூட்டத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இந்த வண்ண அட்டைகளின் அடிப்படையில் பச்சை வண்ண அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இன்று (வியாழக்கிழமை) அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியும். இதர வண்ண அட்டை வைத்திருப்போர் வெளியே வந்தால் அவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story