3 நாட்களாக நீடித்த அச்சம் நீங்கியது: சென்னையில் இருந்து வந்த 500 பேருக்கு கொரோனா இல்லை குமரி மக்கள் நிம்மதி


3 நாட்களாக நீடித்த அச்சம் நீங்கியது: சென்னையில் இருந்து வந்த 500 பேருக்கு கொரோனா இல்லை குமரி மக்கள் நிம்மதி
x
தினத்தந்தி 7 May 2020 12:51 AM GMT (Updated: 7 May 2020 12:51 AM GMT)

சென்னையில் இருந்து வந்த 500 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததால் குமரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.

நாகர்கோவில், 

சென்னையில் இருந்து வந்த 500 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததால் குமரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.

கொரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒவ்வொருவராக குணமாகி வந்தனர். அந்த வகையில் தற்போது வரை 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதற்கிடையே சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற குமரி நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் குமரி மாவட்டத்தில் இருந்து சென்றவர் என்பதால், அவரை குமரி மாவட்ட பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சுகாதாரத்துறை சேர்த்துள்ளது. அதன்படி மொத்தம் 17 பேர் பாதிக்கப்பட்டனர்.

மீண்டும் பரிசோதனை

கொரோனா பாதித்த 13 பேர் வீடு திரும்பிய நிலையில் மீதமுள்ள 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது முதலில் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவரான சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிய வாலிபர் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தால், அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தொற்று இல்லை

இந்த நிலையில் தமிழகத்தில் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடுகிறது. இதற்கிடையே, சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளி மாவட்டங்களுக்கு படையெடுத்தனர். இதனால், அந்த மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியது.

அந்த வகையில், சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊரான குமரிக்கு 500-க்கும் மேற்பட் டோர் படையெடுத்தனர். அவ்வாறு வரும் நபர்களிடம் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்களால் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியதால் குமரி மாவட்ட மக்களும் அச்சத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் சென்னை நபர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனால் குமரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக அவர்களுக்கிடையே இருந்த அச்சம் நீங்கியது. எனினும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story