ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை முடிந்து மேலும் 3 பேர் வீடு திரும்பினர்


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை முடிந்து மேலும் 3 பேர் வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 8 May 2020 2:12 AM GMT (Updated: 8 May 2020 2:12 AM GMT)

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை முடிந்து மேலும் 3 பேர் வீடு திரும்பினர்.

நாகர்கோவில், 

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை முடிந்து மேலும் 3 பேர் வீடு திரும்பினர்.

கொரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சையின் பயனாக ஒவ்வொருவராக குணமடைந்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர்.

2-ம் கட்ட பரிசோதனை

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பூரண குணம் அடைந்தனர். இவர்கள் 3 பேருக்கும் 2-ம் கட்ட கொரோனா பரிசோதனை நேற்று நடந்தது. அப்போது 3 பேருக்கும் மீண்டும் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதாவது சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த வாலிபர் மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 3 பேருக்கும் கொரோனா குணமாகி இருந்தது. அதிலும் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த வாலிபருக்கு 38 நாட்களுக்குப் பிறகு நோய் குணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடு திரும்பினர்

குணமடைந்த 3 பேரும் நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். 3 பேரில் 2 பேர் மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்தவர். 3 பேரையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

முன்னதாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கல்லூரி டீன் ராஜகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் பழங்கள் கொடுத்தும், கைதட்டி வாழ்த்து சொல்லியும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story