மும்பையில் மேலும் 2 போலீசார் கொரோனாவுக்கு பலி


மும்பையில் மேலும் 2 போலீசார் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 20 May 2020 11:18 PM GMT (Updated: 20 May 2020 11:18 PM GMT)

மும்பையில் மேலும் 2 போலீசார் கொரோனாவுக்கு பலி ஆனார்கள்.

மும்பை,

மராட்டியத்தை புரட்டி எடுத்து வரும் ஆட்கொல்லி வைரஸ் போலீஸ் துறையையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 142 அதிகாரிகள் உள்பட 1,388 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 700 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். மராட்டியத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 12 போலீசார் பலியாகி இருந்தனர்.

இந்தநிலையில், மும்பையில் நேற்று மேலும் 2 போலீசாரின் உயிரை இந்த கொடூர வைரஸ் பறித்து உள்ளது. பார்க்சைட் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 57 வயது போலீஸ்காரருக்கு 8 நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்ட சகார் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியான போலீசாரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story