திருவாரூர்-காரைக்கால் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்


திருவாரூர்-காரைக்கால் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 11:47 PM GMT (Updated: 20 May 2020 11:47 PM GMT)

திருவாரூர்-காரைக்கால் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர், 

திருவாரூர்-காரைக்கால் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

மின்மயமாக்கும் பணி

இந்திய ரெயில்வே அனைத்து வழித்தடங்களையும் மின்மயமாக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தென்னக ரெயில்வே திருச்சி-தஞ்சை-திருவாரூர் வழித்தடத்தை மின் பாதையாக மாற்றம் செய்து சோதனை ஓட்டத்தை முடித்து விட்டது.

அதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை-சிதம்பரம்-கடலூர் துறைமுகம் வரை ரெயில் பாதையை மின்மயமாக்கி அதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. இந்த பாதையில் ரெயில்கள் மின்சார என்ஜின்களை கொண்டு இயக்கப்படுகின்றன.

சோதனை ரெயில்

திருவாரூர்-நாகை- காரைக்கால் வழித்தடத்திலும் மின்பாதை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்து விட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சோதனை ஓட்டம் மட்டும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் திருவாரூர்-காரைக்கால் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டத்தை வருகிற 23-ந் தேதி நடத்த முடிவு எடுத்துள்ளது. இதற்காக 22-ந்் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக சிறப்பு சோதனை ரெயில் திருவாரூர் வந்தடைகிறது. இதைத்தொடர்ந்து 23-ந்் தேதி திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரெயில் புறப்பட்டு காரைக்கால் செல்கிறது.

அப்போது ரெயில்வே பாதுகாப்பு குழுவினர் மின் பாதையின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய உள்ளனர். பாதுகாப்பு ஆணையம் மூலம் பயணிகள் ரெயில் இயக்க அனுமதி கிடைத்தவுடன் காரைக்கால்-திருவாரூர்-தஞ்சை வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுக்கு நன்றி

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ‘கொரோனா காரணமாக வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்க உத்தரவிட்ட மத்திய அரசுக்கும், செயல்படுத்தி வருகின்ற ரெயில்வே துறையினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

காரைக்கால்-திருவாரூர்-தஞ்சை வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்குவதால் பயணிகள் பயன் பெறுவார்கள். எஞ்சியுள்ள திருவாரூர்-மன்னார்குடி மற்றும் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-காரைக்குடி வழித்தடங்களையும் விரைந்து மின்மயமாக்க வேண்டும்’ என்றார்.

Next Story