385 சிறப்பு ரெயில்கள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர் மந்திரி அனில் தேஷ்முக் தகவல்


385 சிறப்பு ரெயில்கள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர் மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 12:00 AM GMT (Updated: 20 May 2020 11:54 PM GMT)

385 சிறப்பு ரெயில்கள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர் என்று மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பினர். இந்தநிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக இந்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.

இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல உதவும் வகையில் 325 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று(நேற்று) மாலை மாநிலத்தில் பல்வேறு ரெயில் நிலையங்களில் இருந்து மேலும் 60 சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு உள்ளன.

இந்த 385 சிறப்பு ரெயில்கள் மூலம் சுமார் 5 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி உள்ளனர். இதில் 187 ரெயில்கள் உத்தரபிரதேசத்திற்கும், பீகருக்கு 44 ரெயில்களும், மத்திய பிரதேசத்திற்கு 33 ரெயில்களும், 13 ரெயில்கள் ராஜஸ்தானுக்கும், இதர ரெயில்கள் நாட்டில் மற்ற மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்பதால் அவர்கள் பயண கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன்.

மும்பையில் உள்ள 93 போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் புலம்பெர்ந்த தொழிலாளர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் பணி சுமை அதிகரித்துள்ளது. எனவே அவர்களுக்கு உதவ 1,500 ஊழியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது அவர்களின் வேலை பளுவை சற்று குறைக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story