நாங்குநேரி அருகே ரெயில் என்ஜின் டிரைவரிடம் பணம் பறிப்பு; 5 பேர் கைது


நாங்குநேரி அருகே ரெயில் என்ஜின் டிரைவரிடம் பணம் பறிப்பு; 5 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2020 3:13 AM GMT (Updated: 21 May 2020 3:13 AM GMT)

நாங்குநேரி அருகே ரெயில் என்ஜின் டிரைவரிடம் பணம் பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே ரெயில் என்ஜின் டிரைவரிடம் பணம் பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜின் டிரைவர்

நாகர்கோவிலை சேர்ந்தவர் பிரேம்குமார் (45). இவர் ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் காரில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் பகுதியில் வந்தபோது, எதிரே காரில் வந்த ஒரு கும்பல் அவரது காரை மறித்து ரூ.4 ஆயிரம் மற்றும் 7 கிராம் நகையை பறித்து சென்றது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி, மஞ்சன்குளத்தை சேர்ந்த சாமித்துரை (22), சுப்பையா (23), பரமசிவன் (22), தளவாய்பாண்டி (23), தென்னிமலையை சேர்ந்த சுரேஷ் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

2 பேர் கைது

* மதுரையை சேர்ந்தவர்கள் சுபாஷ் (24), மணிகண்டன் (24). இவர்கள் 2 பேரும், மராட்டிய மாநிலத்தில் இருந்து நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர்களை வேனில் அழைத்துக் கொண்டு வந்தனர். நாங்குநேரி அருகே வந்தபோது, போலீசார் வேனை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் உரிய பாஸ் இல்லாமல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

மாமனார் மீது தாக்குதல்

* திசையன்விளை அருகே வடிவம்மன்பட்டியை சேர்ந்தவர் அருமைநாயகம் (53). இவருடைய மகளை, அதே ஊரை சேர்ந்த பிரபானந்த் (24) என்பவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரமணி தனது தாய் வீட்டுக்கு சென்றார். சம்பவத்தன்று அருமைநாயகம் வீட்டுக்குள் பிரபானந்த் அத்துமீறி நுழைந்து மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் பிரபானந்த், அருமைநாயகத்தை தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து பிரபானந்தை கைது செய்தார்.

Next Story