கொரோனா ஊரடங்கு: தாமதமாக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு அபராதம் கிடையாது உதவி ஆணையாளர் தகவல்


கொரோனா ஊரடங்கு: தாமதமாக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு அபராதம் கிடையாது உதவி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 3:31 AM GMT (Updated: 21 May 2020 3:31 AM GMT)

கொரோனா ஊரடங்கையொட்டி தாமதமாக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு அபராதம் கிடையாது என உதவி ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

கொரோனா ஊரடங்கையொட்டி தாமதமாக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு அபராதம் கிடையாது என உதவி ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ்

சர்வதேச பரவலில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவாமல் மற்றும் இதர இடையூறுகளை கட்டுப்படுத்துவற்காக அரசால் அறிவிக்கப்பட்ட நீண்ட கால பொது முடக்கத்தின் காரணமாக வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வழிமுறை சட்டம் 1952-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் சாதாரணமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த நிறுவனங்கள் வருங்கால வைப்புநிதி சந்தா செலுத்த முடியாமலும் சிரமப்பட நேரிடுகிறது.

பொது முடக்க காலத்திற்கான வருங்கால வைப்பு நிதி சந்தா மற்றும் நிர்வாக கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டியதில் நிறுவனங்கள் எதிர் நோக்கி வரும் சிரமங்களை அறிவோம்.

அபராத தொகை

இதை கருத்தில் கொண்டு நிறுவனங்களுக்கு செயல்பட மற்றும் பொருளாதார காரணங்களினால் ஏற்படும் தாமதம் தவறாக கருதப்படாது. அத்தகைய காரணத்துக்கு அபராத தொகை வசூலிக்கப்படாது. வருங்கால வைப்பு நிதி இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் கோவிட் 19-ன் கீழ் பட்டியலிட்டுள்ள அத்தகைய நிறுவனங்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற அறிவுரை அடங்கிய சுற்றறிக்கை ஒன்று அனைத்து கள அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

மேற்கண்ட நடவடிக்கையானது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உள்ள 6.5 லட்சம் நிறுவனங்களுக்கு சந்தா செலுத்துவதை எளிமைப்படுத்தும் மற்றும் அபராத தொகை செலுத்துவதில் இருந்து விடுவிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story