நெல்லை - தூத்துக்குடியில் 5 மாத கைக்குழந்தை உள்பட 27 பேருக்கு தொற்று உறுதி தென்காசியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


நெல்லை - தூத்துக்குடியில் 5 மாத கைக்குழந்தை உள்பட 27 பேருக்கு தொற்று உறுதி தென்காசியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 23 May 2020 12:40 AM GMT (Updated: 23 May 2020 12:40 AM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 5 மாத கைக்குழந்தை உள்பட மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 5 மாத கைக்குழந்தை உள்பட மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

நெல்லையில் 18 பேருக்கு

நெல்லையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று கங்கைகொண்டான் சோதனை சாவடியில் மும்பையில் இருந்து வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் மானூரை சேர்ந்த 7 பேர், நாங்குநேரியை சேர்ந்த 4 பேர், களக்காட்டை சேர்ந்த 3 பேர், பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர், ராதாபுரத்தை சேர்ந்த 2 பேர் அடங்குவர். இதில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதுதவிர நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், சந்தேகத்தின் பேரில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

271 ஆக அதிகரிப்பு

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சிந்துபூந்துறை பகுதிக்கு சென்றனர். அவருடைய வீடு மற்றும் கடை பகுதியில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. உள்ளூரை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி? என்று மருத்துவ குழுவினர் விசாரணையில் இறங்கினார்கள். அப்போது கொரோனா நோயாளி 2 நாட்கள் காய்ச்சலுக்கு உள்ளூர் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த டாக்டர் மற்றும் அவரது ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரை கொரோனா பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு சித்தா மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இதனால் நெல்லை சந்திப்பு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இவர்கள் 18 பேருடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 177 பேர் தற்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

5 மாத கைக்குழந்தை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 36 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதே போன்று கோவில்பட்டியில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 5 மாத கைக்குழந்தை உள்பட 4 பேருக்கும், விளாத்திகுளத்தில் ஒருவர் உள்பட புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் தொற்று இல்லை

தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை.

அந்த மாவட்டத்தில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே 50 பேர் குணமடைந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story