விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.30 கோடியில் ஏரிகள், அணைக்கட்டு வாய்க்கால் புனரமைக்கும் பணிகள்


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.30 கோடியில் ஏரிகள், அணைக்கட்டு வாய்க்கால் புனரமைக்கும் பணிகள்
x
தினத்தந்தி 23 May 2020 3:17 AM GMT (Updated: 23 May 2020 3:17 AM GMT)

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.30 கோடியில் ஏரிகள் புனரமைக்கும் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

 தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை மூலம் தமிழ்நாடு நிலவள திட்டத்தின் கீழ் பெண்ணையாறு உபவடி நிலத்தில் பணிகள் மேற்கொள்ள அரசு, நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. 

இதில் கீழ்பெண்ணையாறு வடிநில கோட்டம் விழுப்புரம் மூலம் விழுப்புரம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தாலுகாக்களில் உள்ள 46 ஏரிகளிலும், திருக்கோவிலூர் அணைக்கட்டு, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு ஆகிய 2 அணைக்கட்டு வாய்க்கால்களிலும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஏரிகளிலும் ரூ.29 கோடியே 93 லட்சத்தில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இப்பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக நேற்று விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள ஏரியில் ரூ.3 கோடியே 39 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைக்கும் பணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  

அப்போது அவர் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் 69.745 கி.மீ. தூரத்திற்கு ஏரிக்கரை பலப்படுத்துதல், 11 மதகுகள் சீரமைப்பு, 63 மதகு மறு கட்டுமான பணிகள், 38 கலுங்கல் மறுசீரமைப்பு, 138.455 கி.மீ. தூரத்திற்கு வரத்து வாய்க்காலை தூர்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

 இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் 49 ஏரிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைக்கும் பணிகள் மூலம் 7,882.14 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது என்றார். 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர்கள் ஞானசேகரன், ஜெகதீஷ், ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் நகர செயலாளர் காசிநாதன், அற்பிசம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன், வளவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story